தூத்துக்குடி மாவட்டம் :
சமூக பாதுகாப்புத்துறை, தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு இளைஞர் நீதி அமைப்பு குறித்த ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகம் வெளியிட்டு, இளைஞர் பாதுகாப்புச்சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். அவர் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்போது, அவ்வலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு, ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகள் பற்றி உங்களுக்கு தெரிய வரும்பட்சத்தில் ‘சைல்டு ஹெல்ப் லைன் இலவச அழைப்பு எண். 1098க்கு தகவல் கொடுத்தால் உடனடியாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள். இந்திய தண்டனைச்சட்டப்படி 7 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் எந்த ஒரு தவறு செய்திருந்தாலும் அது குற்றமாக கருத இயலாது. 2000ம் ஆண்டில் இளைஞர் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. பின் 7 வயதுக்கு மேல் 18 வயது வரையுள்ளவர்கள் தவறு செய்தால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆழ்ந்து பரிசீலனை செய்யப்பட்டு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. சிறிய தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. பெரிய குற்றங்களை செய்தவர்களை கூட காவல் நிலையத்திற்கு கூட்டிச்செல்லுதல், நீதி மன்றத்திற்கு அழைத்துச்செல்லுதல், மற்றவர்களை அடைக்கும் சிறையில் அடைத்தல் போன்றவை கிடையாது. அவர்களுக்கென 3 உறுப்பினர்கள் கொண்ட ‘ஜுவனைல் ஜஸ்டிஸ் போர்டு’ தான் ஆஜர்படுத்தப்படுவார்கள். 2012ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டப்படி உதாரணத்திற்கு 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்ணை, 18 வயதுக்கு மேல் உள்ள ஒரு ஆண், அவள் சம்மதத்துடன் பாலியல் ரீதியான தொடர்பு கொண்டாலும் அது போக்சோ சட்டத்தின்படி அந்த ஆண் குற்றம் செய்தவரென அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இளைஞர் பாதுகாப்புச்சட்டம் பற்றி விரிவுரையாற்றினார். பின் கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் சந்தேகங்கள் உள்ளதா என்று கேட்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். இக்கருத்தரங்கில் காமராஜ் கல்லூரி இயக்குநர் டோனி மெல்வின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிக்குமார், கல்லூரி முதல்வர் நாகராஜன், பேராசிரியர் பியூலா, டாக்டர் செய்யது உமர்காதாப் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்