இன்று முதல் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்பு



மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அரசாணையாக வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாளான இன்று (திங்கட்கிழமை) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு எதிரே உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் மரக்கன்று நடுகிறார்.

அதைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கோட்டையில் நடைபெறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

கருத்துகள்