துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை: உறவினர்கள் கோரிக்கை

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை

துபாயில் இறந்த தூத்துக்குடி இளைஞர் உடலை சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர், தமிழக முதல்வருக்கு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, புளியம்பட்டி அருகிலுள்ள கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் வேல்முருகன் (35). துபாய் நாட்டில் உள்ள RAS AL KHAIMAH என்ற இடத்தில், KHANBOLLI Electro Mechanical Cont LLC எனும் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். கொரோனா நோயால் துபாய் நாட்டிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக இளைஞர் வேல்முருகன் தனது சக பணியாளர்களுடன் 10.05.2020 அன்று அவரது நிறுவனத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென்று மின்னழுத்தம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். 

மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதனை உறுதி செய்துள்ளனர். இப்போது உடல் துபாயில் உள்ள மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்துள்ளனர். துபாயில் இருக்கும் வேல்முருகன் மனைவி மணிமேகலை தனது கணவரின் உடலைக் கூட பார்க்க முடியாமல் தவித்து வருவதாக கண்ணீருடன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வேல்முருகனின் தந்தை சி.கதிர்வேல் மற்றும் குடும்பத்தினர் தங்கள் மகன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்.டுமென, தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மூலமாக தூத்துக்குடி எம்பி கனிமொழி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, மதிமு,க பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் கொடியன்குளம் கிராம மக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். வேல்முருகன் உயிரிழந்த சோகத்தாலும், அவரது, உடலைக் கூட காண முடியாமலும் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

கருத்துகள்