தூத்துக்குடி நகருக்கு வெளியே காய்கனி மார்க்கெட் இடமாற்றம் : ஆட்சியரிடம் கோரிக்கை


தூத்துக்குடி நகருக்கு வெளியே காமராஜர் காய்கனி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மக்கள் மேம்பாட்டு கழகம், அமைப்பாளர் வழக்கறிஞர் இ.அதிசயகுமார் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: நான் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், மக்கள் மேம்பாட்டு கழகம் அமைப்பின் அமைப்பாளராகவும் இருந்து சமூகப் பணிகள் செய்து வருகின்றேன்.

தூத்துக்குடி மாநகரத்திற்குள் வரக்கூடிய பாளை ரோட்டின் அருகில் காமராஜர் காய்கனி மார்க்கெட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் காய்கனி மொத்த கொள்முதல் சந்தையானது பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. தற்போது கடந்த   மார்ச் மாதத்திலிருந்து Covid19 தொற்றுநோயானது உலகம் முழுவதும் பரவி வருவதினால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று சுகாதாரத்துறையின் உத்திரவின் அடிப்படையில் மேற்படி மார்க்கெட் மூடப்பட்டு, அங்கு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு மாநகராட்சியின் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு பழைய பேருந்துநிலையம் மற்றும் வ.உ.சி. கல்லூரி அருகில் மொத்த கொள்முதல் வியாபாரிகள் வியாபாரம்செய்யஅனுமதிக்கப்பட்டாக ள்.

மேற்படி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து காமராஜர் காய்கனி மார்க்கெட் இடத்திலிருந்து வியாபாரிகளை வெளியிடங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்ட பின்புதான் மேற்படி காமராஜர் காய்கனி மார்க்கெட் நிர்வாகத்தினர் மாநகராட்சியின் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக 19 கடைகள் இயங்க வேண்டிய இடத்தில் 137 கடைகளை வைத்து வியாபாரிகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்த விவரம் வெளி வந்துள்ளது. மேலும் மேற்படி காய்கனி மார்க்கெட் நிர்வாகத்தினர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில்வரியினை மறைத்து மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி காய்கனி மார்க்கெட் நிர்வாகத்தினர் தனது அரசியல் மற்றும் பணம் செல்வாக்கினால் போக்குவரத்து மிகுதியாக உள்ள அதே இடத்தில் காய்கனி மார்க்கெட்டை திறப்பதற்கான முயற்சி எடுத்து வருகின்றார்கள். மேலும் மேற்படி காய்கனி மார்க்கெட் நிர்வாகத்தினருக்கு பாத்தியப்பட்ட தூத்துக்குடி, பாளை ரோடு, ஸ்பின்னிங் மில்லுக்கு கீழ்புறத்திலுள்ள இடத்தில் புதியதாக காய்கனி மார்க்கெட்டை திறப்பதற்கு தங்களிடமும், மாநகராட்சியிடமும் அனுமதி கேட்டுள்ளார்கள். மேற்படி காய்கனி மொத்த கொள்முதல் சந்தையானது மேற்படி இரண்டு இடத்திலும் அமைக்கப்பட்டால் தூத்துக்குடி நகரத்திற்குள் வரக்கூடிய இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களில் வரக்கூடிய பொதுமக்களும், பஸ் போக்குவரத்தும் மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகும். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், அலுவலர்களும் போக்குவரத்து மிகுதியால் பாதிக்கப்படுவார்கள்.

மேற்படி காய்கனி மார்க்கெட் சந்தையானது மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் தூத்துக்குடி நகரத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்படும் பட்சத்தில் நகரத்திலுள்ள பொதுமக்கள் போக்குவரத்து பாதிப்பின்றி தங்களது பணிகளுக்கு சென்று வர ஏதுவாக இருக்கும். தூத்துக்குடி வாழ் பொதுமக்கள் நலன் சார்ந்து தாங்களும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்படி இரண்டு இடங்களிலும் காய்கனி மொத்த கொள்முதல் சந்தையினை தனிநபர்கள் நிறுவுவதற்கு தாங்கள் அனுமதி வழங்காமல் இருக்க வேண்டியது பொதுமக்களின் நலன் சார்ந்து அவசியமாகின்றது.

ஆகவே உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சியின் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டு வந்த காய்கனி மொத்த கொள்முதல் சந்தையினை தூத்துக்குடி நகர்புறத்தில் அமைப்பதற்கு தங்கள் அனுமதி மறுத்து, தூத்துக்குடி நகரத்திற்கு வெளியே மாநகராட்சியின் கண்காணிப்பில் அமைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன, தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், அரசு செயலாளர்,நகராட்சி நிர்வாகம் மற்றும் வழங்கல் துறை, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர், போக்குவரத்து காவல் ஆகியோர்களுக்கும் மனுவின் நகல் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள்