தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளின் 152வது பிறந்தநாள் : மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி காதி அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் 152வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் காதி அங்காடியில் குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி வெஸ்ட் கிரேட் காட்டன் ரோட்டில் உள்ள காதி அங்காடியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் கதர்த்துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள் 152வது பிறந்தநாள் விழா இன்று (02.10.2020) கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்தார். முன்னதாக தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
அண்ணல் காந்தியடிகள் 151வது பிறந்தநாளையொட்டி காதி அங்காடியில் சிறப்பு விற்பனை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி சிறப்பு விற்பனை துவக்கி வைக்கப்படும். நமது மாவட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் காதி சிறப்பு அங்காடிகள் உள்ளது. கடந்த வருடம் ரூ.70.25 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதைவிட கூடுதலாக விற்பனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டு ரூ.80 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் இலக்கினைவிட கூடுதலாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதி விற்பனை அங்காடிகளின் சிறப்பம்சம் என்னவென்றால் நமது கிராமப்பறத்தில் உள்ள நெசவாளர்கள் மூலமாக 100 சதவீதம் தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. பட்டுப்புடவைகள், வேட்டிகள், போர்வைகள், துண்டுரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தைகள், தலையணைகள், கண்கவரும் கதர் பட்டு ரகங்கள் மற்றும் தேன், சோப்பு, பூஜை பொருட்கள், பனைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெற்று கதர் மற்றும் பாலிவஸ்திர ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.
நமது கிராமப்புற நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் காதி பொருட்களை வாங்கினால் தள்ளுபடி கிடைப்பது மட்டுமல்லாமல் நேரடியாக கிராமப்புறங்களில் உள்ள நெசவாளர்களுக்கு லாபம் கிடைக்கும். எனவே அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குநர் (பனைவெல்லம்) திரு.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், வட்டாட்சியர் திரு.ஸ்டீபன், மாநகராட்சி உதவி ஆணையர் திரு.பாலசுந்தரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் திரு.மு.கேசவமூர்த்தி (செய்தி), திரு.ரா.ராமசுப்பிரமணியன் (விளம்பரம்), தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திரு.முரளிதரன், வருவாய் ஆய்வாளர் திரு.பழனிகுமார், மாநகராட்சி உதவி பொறியாளர் திரு.பிரின்ஸ், காதி கிராப்ட் மேலாளர் திரு.ஸ்ரீதர், பணியாளர்கள் திருமதி.முத்தம்மாள், திரு.பிரதீப் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக