வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடியவர் கைது - ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 13 பவுன் தங்க நகைகள் மீட்பு - கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையற்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பிச்சையம்மாள் (62) என்பவர் தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 13 பவுன் எடை கொண்ட தங்க நகைகள் 5 மோதிரம், ஒரு கைச்செயின் மற்றும் ஒரு இரண்டு வடச்செயின் ஆகியவற்றை 15.05.2020 அன்று யாரோ வீடு புகுந்து திருடிச் சென்று விட்டதாக 16.05.2020 அன்று பிச்சையம்மாள் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏரல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. முத்துலெட்சுமி அவர்கள் தலைமையில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலு, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ஜேம்ஸ் மற்றும் காவலர் செந்தில் குமார் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் இன்று (03.10.2020) கொற்கையில் உள்ள ஒரு வங்கியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஏரல், இடையற்காடு வடக்குத்தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகன் ராமஜெயம் (37) என்பவரை விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால் தனிப்படை போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரணை செய்ததில் அவர் கொத்தனார் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புகார்தாரர் பிச்சையம்மாள் வீட்டில் ஏணிப்படி கட்டும் வேலைக்கு சென்று வந்ததாகவும், அப்போது பேச்சியம்மாள் மகன் மற்றும் மகள் வெளியூரில் வசித்து வருகின்றனர் என்பதையும், வயதான பிச்சையம்மாள் மற்றும் அவரது கணவர் செல்வராஜ் ஆகியோர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருவதையும் தெரிந்து வைத்துள்ளார்.
இதனை நோட்டமிட்ட எதிரி ராமஜெயம் 15.05.2020 அன்று செல்வராஜ் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். பின் திருடிய நகைகளை ராமஜெயம் தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் குழி தோண்டி புதைத்து வைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்றவுடன் அவற்றை அங்கிருந்து எடுத்து கொற்கை மற்றும் சிவத்தையாபுரத்தில் உள்ள வங்கிகளிலும் மற்றும் சாயர்புரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திலும் அடமானம் வைத்து, அந்தப் பணத்தை ராமஜெயம் வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்துள்ளார்.
இது குறித்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள வங்கிகளில் விசாரணை செய்து வருவைதையறிந்த எதிரி ராமஜெயம் மேற்படி அடகு வைத்த திருட்டு நகைகளை திருப்புவதற்காக நின்று கொண்டிருந்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
அதனடிப்படையில் தனிப்படை போலீசார் ராமஜெயத்தை கைது செய்து, திருடிய 13 பவுன் தங்க நகைகளையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
மேற்படி ராமஜெயத்தை கைது செய்து, திருடிய நகைகளை பறிமுதல் செய்த மேற்படி தனிப்படை போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக