தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அலுவலர்களுடன் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பின்னர் தருவை மைதானம் ஜார்ஜ் ரோடு பகுதியில் மழை வெள்ள நீரை மாநகராட்சி மூலம் மோட்டார் வைத்து அப்புறப்படுத்தும் பணிகளை
மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
---------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெயசீலன், இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்களுடன் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தலைமையில் தூத்துக்குடி ஆய்வு மளிகையில் ஆய்வு கூட்டம் இன்று (18.11.2020) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் எந்தெந்த பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீர் மோட்டார் மூலம் எந்தெந்த பகுதியில் அகற்றப்படுகிறது. எவ்வளவு குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் கூடுதல் மோட்டார்களை பயன்படுத்தி விரைந்து மழை நீரை அப்புறப்படுத்தவும் மோட்டார்கள் பயன்படுத்த முடியாத பகுதியில் நீர் உறிஞ்சும் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மழை வெள்ளம் காரணமாக சுகாதார குறைபாடுகள் ஏதும் ஏற்படாத வகையில் சுகாதார சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி தருவை மைதானம் ஜார்ஜ் ரோடு பகுதியில் மழை வெள்ள நீரை மாநகராட்சி மூலம் மோட்டார் வைத்து அப்புறப்படுத்தும் பணிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழையின்போதுதான் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். தற்போது ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. இயல்பான மழை பெய்து வரும் நிலையில் கடந்த 16ம் தேதி திங்கட்கிழமை ஒரே நாளில் தமிழகத்திலே அதிக மழையாக 17 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஒரே நாளில் அதிக கன மழை பெய்த காரணத்தால் ஒரு சில பகுதியில் நீர் தேங்குகின்ற நிலை ஏற்படுகையில் அதனை உடனடியாக எவ்வாறு சரி செய்வது குறித்து மாநகராட்சி அலுவலரிடம் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. விரைவாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவும், தெங்கிய தண்ணீரை அகற்றவும், போர் கால அடிப்படையில் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்தன் காரணமாக வெள்ள நீர் வடிந்து பாதிப்பு இல்லாத நிலை உள்ளது. மாநகராட்சி மூலம் 70 மோட்டார் இயந்திரங்களை பயன்படுத்தியும், மேலும் ஊரக பகுதியில் இருந்து 10 மோட்டார் கொண்டு வரப்பட்டு 80 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மோட்டார்கள் தொடர்ந்து இயக்கபடும் காரணத்தால்தான் மழை நீர் நிறைந்த பகுதிகள் சரி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் இருக்கின்ற நீர் விரைந்து வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலான மழை பெய்தாலும் அதை சமாளிக்க கூடிய வகையிலே நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் காயல்பட்டணம் பகுதியில் 21.5 செ.மி. மழை பெய்ததன் காரணமாக ஒரு சில பகுதியில் மழை வெள்ளம் தேங்கி இருந்தது. அங்கேயும் சென்று ஆய்வு செய்யப்பட்டது. மழை நீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபடியான மழை பெய்து இருந்தாலும் கூட மக்களுக்கு எவ்வித இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மீட்பு பணிகள் முழு வீச்சில் செய்யபட்டு வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், மாநகராட்சி தலைமை பொறியாளர் திரு.சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் திரு.சரவணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.செல்வக்குமார், முக்கிய பிரமுகர்கள் திரு.ஆறுமுகநயினார், திரு.திருப்பாற்கடல், திருமதி.செரினாபாக்கியராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக