தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்களுக்கு முழு திருவுருவசிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு

 


 தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்களுக்கு முழு திருவுருவசிலையுடன் மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் காமநாயக்கன்பட்டி கிராமத்தில் புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் தமிழ் அகராதியின் தந்தை என போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் முழு திருவுருவசிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளதன் அடிப்படையில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் காமநாயக்கன்பட்டிக்கு நேரில் வந்து மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டு தேர்வு செய்தனர். 

பின்னர் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

உலகின் தொன்மையான மொழி தமிழ்மொழி என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளது. தமிழ் மொழியை காக்க வேண்டும், தமிழ் மொழிக்குரிய அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சராக இருந்து பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் உலக தமிழ் மாநாட்டினை சென்னையில் நடத்தினார்கள். இரண்டாம் உலக தமிழ் மாநாட்டினை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மதுரையில் நடத்தினார்கள். அதன்பிறகு, உலக தமிழ் மாநாட்டினை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தஞ்சாவூரில் ; நடத்தினார்கள். அங்கே தமிழ் பல்கலைக்கழகத்தையும் உருவாக்கினார்கள். தற்போது முதலமைச்சர் அவர்களும் தமிழ் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

உலகின் தொன்மையான மொழி என்பதற்காகத்தான் வருகின்ற வெளிநாட்டவர்கள் கூட தமிழ்மொழியின்மீது பற்றும் கொண்டு, பாசம் கொண்டு தமிழ்மொழியை  வளர்த்துள்ளார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளது. 1680ம் ஆண்டு பெயர் நவம்வர் 8ம் தேதி இத்தாலியில் பிறந்தார். இத்தாலியில் பிறந்த வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி. அவர் கொச்சி வழியாக கால்நடையாக காமநாயக்கன்பட்டிக்கு வருகை தந்தார். இங்குள்ள புனித பரலோக மாதா ஆலயத்தில் 5வது பங்குதந்தையாக பணியாற்றினார். அந்த நேரத்தில் தேம்பாவணி என்ற நூலை இயற்றி தமிழ்மொழிக்கு என அகராதியை படைத்தார். முதன்முதலில் தமிழ்மொழிக்கென அகராதியை உருவாக்கியவர் வீரமாமுனிவர். வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தாலும் அவரது தாய்மொழி ஆங்கில மொழியாக இருந்தபோதும் இந்தியாவிற்கு வந்து இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருப்பினும் தமிழ்மொழியை தேர்வு செய்து தமிழ் தொண்டாற்றியுள்ளார். 

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வீரமாமுனிவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை அமைக்கப்பட்டு அவருக்கு ஆண்டுதோறும் அரசு விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி அருகில் உள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய அவர் வாழ்ந்த பகுதியிலேயே அவருக்கு  மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை நிறைவேற்றுகின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த மாதம் 11ம் தேதி தூத்துக்குடிக்கு வருகை தந்தபோது வீரமாமுனிவருக்கு ரூ.1 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பினை வெளியிட்டார்கள். இது தமிழர்களின் உள்ளங்களில் அவருக்கு புகழ் சேர்க்கின்ற இந்த மகத்தான அறிவிப்புக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம்  உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இங்கு வருகை தந்து நானும், மாவட்ட ஆட்சித்தலைவர், பங்குதந்தை மற்றும் முக்கிய பிரமுகர்கள் இங்கு வந்து இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம். விரைவில் இந்த இடத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற மகிழ்வான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், கயத்தாறு வட்டாட்சியர் திரு.பாஸ்கரன், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய பங்குதந்தை திரு.அந்தோணிகுருஸ், பாளை மறைமாவட்ட பொருளாளர் திரு.அந்தோணிசாமி, கோவில்பட்டி வட்டார அதிபர் திரு.அலோசியஸ் துரைராஜ், காமநாயக்கன்பட்டி துணை பங்கு தந்தை சுதன்,  முக்கிய பிரமுகர்கள் திரு.வண்டானம் கருப்பசாமி, திரு.ராஜேந்திரன், திரு.சகாயப்பராஜ், திரு.சூசைபிரான்சிஸ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்