வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
------------------------------------------------------------------------------------------------------------------------------------- .. .
தூத்துக்குடி மாவட்டமானது அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை கிடைக்கப் பெறும் மாவட்டமாகும். மாவட்டத்தில் 41,360 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்தல், மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்த்தல், கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரி நீர் வடிந்தபின நடவு, விதைப்பு பணிகளை மேற்கொள்ளல், வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்த்தல், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து செடிகள் சாயாவண்ணம் பாதுகாத்தல், மழைநீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பல்லாண்டு பழப்பயிர்களான மா, கொய்யா, மாதுளை ஆகியவற்றில் கவாத்து செய்து நல்ல காற்றோட்டம் கிடைக்கும் வண்ணம் செய்ய வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காத வண்ணம் தாங்கு குச்சிகளால் கட்ட வேண்டும். பூஞ்சாண நோய்களை தடுக்க டிரைகோடெர்மாவிரிடி நிலத்தில் தெளிக்க வேண்டும்.
வாழைப்பயிரை பொறுத்தமட்டில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரத்தை காற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். மேலும், 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.
பந்தல் காய்கறிகள் மற்றும் பூ பயிர்களுக்கு உரிய வடிகால் வசதி செய்தல், நோய்தடுப்பு மருந்துகள் தெளித்தல், காய்ந்த இலைகளை அகற்றுதல் முதலியவற்றை கடைப்பிடித்தல் வேண்டும். பசுமைக்குடிலின் கதவு, ஜன்னல்கள் மூடியிருத்தல், அருகிலுள்ள பட்டுப்போன, காய்ந்து போன மரங்களை அகற்றுதல், கட்டுமானத்திலுள்ள கிளிப்புகளை மாற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக