தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயின்பறிப்பில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்களை ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் விரட்டிப்பிடித்து கைது - ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயின் மீட்பு - கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
ஆறுமுகநேரி குருஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹர் மனைவி ரோஸ்மேரி என்பவர் நேற்று (19.04.2021) தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்ணைவிளை மொட்டையாசாமி கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு நம்பர் பதிவு இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியை காண்பித்து மிரட்டி ரோஸ்மேரியின் கழுத்திலிருந்த 3 ¼ சவரன் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து ரோஸ்மேரி அளித்த புகாரின் பேரில் உடனடியாக மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு, ஆங்காங்கே காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோந்துப் பணியிலிருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லெட்சுமி பிரபா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன், தலைமைக் காவலர்கள் திரு. நிறைகுளத்தான், திருமதி. ரோஸ்லின், திருமதி. முத்துகனி, முறப்பநாடு தனிப்பிரிவு காவலர் திரு. சேகர், முதல் நிலைக் காவலர் திரு. ஹரிகிருஷ்ணன், காவலர்கள் திரு. மகாலிங்கம், திரு. கோகுலகிருஷ்ணன்;, திரு. கணேஷ், திரு. முத்துகுமார், திரு. இசக்கிமுத்து, திரு. வெங்கடேஷ்வரன், திரு. ஜான் அந்தோணிராஜ் மற்றும் திரு. புகழேந்திரன் ஆகியோர் சம்மந்தப்பட்ட எதிரிகளான திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்களான மைதின் லெப்பை மகன் பெரோஸ்கான் யாசர் (26) மற்றும் சாம் சாகபுதின் மகன் அப்துல் பாசித் (24) ஆகியோரை விரட்டிச் சென்று பிடித்து, அவர்கள் பறித்த ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 3 ¼ பவுன் தங்கச் செயினையும் மீட்டு, அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட எதிரி பெரோஸ்கான் யாசர் மீது திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூர், டவுண், ஜங்சன், பேட்டை மற்றும் வீரவநல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 9 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.
சம்பவம் நடந்த உடன் பாதிக்கப்பட்ட பெண் ரோஸ்மேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து போலீசாhருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உடனடியாக விரட்டிப்பிடித்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையை வெகுவாக பாராட்டினர்.
மேலும் எதிரிகளை விரட்டிப்பிடித்து தங்கச் செயினை மீட்ட ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், காவல் ஆய்வாளர் திருமதி. லெட்சுமி பிரபா தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக