21 குண்டுகள் முழங்க எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதிச்சடங்கு

 

 கரிசல் இலக்கியத்தின் தந்தை எனவும் இலக்கிய உலகத்தால் கி.ரா என்றும் அன்போடு அழைக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் இறுதிச்சடங்கு சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் 

21 குண்டுகள் முழங்க நடைபெற்றது.

------------------------------------------

கரிசல் இலக்கியத்தின் தந்தை எனவும் இலக்கிய உலகத்தால் கி.ரா என்றும் அன்போடு அழைக்கப்பட்ட எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் அவர்கள் முதுமையால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் 17.05.2021 அன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று (19.05.2021) அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. 







இறுதி சடங்கு நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள், மாண்புமிகு தொழில்துறை, தமிழ் ஆட்சி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத் தொல்பொருள்  துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மதுரை பாராளுமன்ற உறுப்பினர் திரு.வெங்கடேசன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜீ.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), டாக்டர் சி.சதன்திருமலைக்குமார் (வாசுதேவநல்லூர்), டாக்டர் ரகுராம் (சாத்தூர்) ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் உடலுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து காவல் துறையினர் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.  

பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வாழ்க்கையையும், மொழியையும் தமிழ் உலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர் மொழி ஆளுமையில் மிக முக்கியமான ஒருவரை நாம் இழந்திருக்கின்றோம். இலக்கிய சிந்தனை, சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தமிழ் உலகமே கி.ரா என போற்றி வணங்கிய, கொண்டாடிய ஒரு எழுத்தாளர் நம்மை விட்டு பிரிந்திருக்கின்றார்கள். கரிசல் மண்ணின் பெருமையை மக்களுடைய இலக்கியங்களை, மொழியை, மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து தன் வாழ்நாளின் முழுவதும் எழுதி கொண்டாடியவர். நாவல்கள், சிறுகதைகள், பெரு கதைகள், கட்டுரைகளை தனது இறுதிவரை எழுதியவர். தமிழ் மொழியை தொடர்ந்து பலப்படுத்திக்கொண்ட ஒரு எழுத்தளார் நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். அவருக்கு முதல் முறையாக சம கால நவீன எழுத்தாளர் ஒருவருக்கு அரசின் சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டுள்ளது. அதை வழங்கிட உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுத்தாளர்கள் சார்பிலும், அவரது குடும்பத்தின் சார்பிலும், தமிழ் மக்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி அவருக்கு சிலை வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். ஒரு தமிழ் எழுத்தாளருக்கு தமிழக அரசு மரியாதையும், சிறப்பையும் செய்தமைக்கு அரசுக்கு மறுபடியும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கி.ரா அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும் அவரை பார்த்து வட்டார வழக்குகளில், மொழிகளில் பல்வேறு கதைகளை சொல்ல முன் வந்திருக்கிறார்கள். அந்த விதத்தில் அவரது எழுத்து பணி தொடர்ந்து நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், முக்கிய பிரமுகர்கள் திரு.எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர், திரு.ராமஜெயம், திரு.எஸ்;.ஜே.ஜெகன், திரு.துரை வையாபுரி, கோவில்பட்டி வட்டாட்சியர் திருமதி.அமுதா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


.

கருத்துகள்