.
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்களுக்கு சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்துமாலை, ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சுப்பையா, தலைமை காவலர் திரு. கோபால் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சர்க்கரை மகன் அறிவழகன் (42) என்பவரது வீட்டருகில் உள்ள ஒரு ஓட்டு சாய்ப்பில் சோதனை செய்தனர். அங்கு 15 சாக்கு மூட்டைகளில் சட்டவிரோத விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை; அறிவழகன் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி போலீசார் அறிவழகனை கைது செய்து, அங்கிருந்த ரூபாய் 8,00,000 மதிப்புள்ள 400 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் ஏற்கனவே இது போன்று 2 புகையிலை பொருட்கள் சம்மந்தப்பட்ட வழக்கில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி எதிரியை கைது செய்து, பதுக்கி வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
இந்த ஆண்டு கடந்த 4 ½ மாதத்தில் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை செய்ததற்காகவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரை 83 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 103 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் மட்டும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கி வைத்திருந்தவர்கள் என 156 வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதில் 4 பேர் புகையிலை வழக்கில் ஈடுபட்டவர்களும், 4 பேர் கஞ்சா வழக்கில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொரோனா கால ஊரடங்கில் கடந்த 3 நாட்களில் மட்டும் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களின் 1420 இரு சக்கர வாகனங்களும், 24 ஆட்டோக்களும், 5 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தயவு செய்து இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையில்லாமல் வீட்டு விட்டு வெளியே வரவேண்டாம்;. கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைய ஆரம்பித்துள்ளது. அதனால் உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை எளிதாக கட்டுப்படுத்திவிடலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ், எட்டயாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக