தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
------------------------------
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் வளர்க்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.06.2021) நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மியாவாக்கி முறையில் அடர்காடுகள் அமைக்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வேலி அமைத்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பழமை வாய்ந்த நாட்டு மரங்களை நடுதல் மற்றும் பராமரித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பாரம்பரிய மரங்களான வேம்பு, புங்கன், பூவரசு, புளி, வாகை உள்ளிட்ட 14 வகையான சுமார் 1 லட்சம் எண்ணிக்கையிலான மரங்கள் வளர்க்கப்படுகிறது. கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளுக்கு இங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அந்த பகுதிகளில் பசுமை சூழல் ஏற்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மேலும், பருவமழை குறிப்பிட்ட காலங்களில் தவறாமல் நமக்கு கிடைக்கும். இதன் மூலம் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறையின்றி கிடைப்பதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அடர்காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு அந்தந்த ஊராட்சிகளில் அடர்காடுகள் உருவாக்கப்பட்டு சுற்றுச்சூழல் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதயஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், கயத்தாறு வட்டாட்சியர் திரு.பேச்சிமுத்து, கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அரவிந்தன், திருமதி.பானு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக