தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் கொட்டாரக்குறிச்சியில் ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்தல் தொடர்பாக ஊராட்சி மகளிர் கூட்டமைப்புகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
---------------------
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் கொட்டாரக்குறிச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் சார்பில் ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்தல் தொடர்பாக ஊராட்சி மகளிர் கூட்டமைப்புகளுக்கான பயிற்சி முகாம் இன்று (28.06.2021) நடைபெற்றது.
பயிற்சினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நலிந்தோர் தொழில் தொடங்கிட 3 நபர்களுக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கொட்டாரக்குறிச்சி ஊராட்சி தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் தூய்மை காவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 9 நபர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும் மகளிர் கூட்டமைப்பு மூலம் வைக்கப்பட்டிருந்த உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:
மகளிர் சுய உதவிக்குழுவினர் என்பதைவிட உங்களை அரசிற்கு உதவும் குழுவினர் என அழைக்கலாம். கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்களின் சிரமங்களை போக்க மகளிர் கூட்டமைப்புகளின் சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை மையங்கள் துவக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மேலும் கிராம ஊராட்சி அளவில் சுகாதார வளாகங்களை பராமரித்தல், குடிநீர் வழங்கும் ஆர்.ஓ பிளாண்டுகளை பராமரித்தல், தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நீங்கள் ஈடுபட்டு வருகிறீர்கள். இங்கு ஊராட்சி மகளிர் கூட்டமைப்பின் சார்பில் உற்பத்தி செய்யப்பட்ட பொம்மைகள், தேன், மண்பாண்டங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் சிறப்பாக நேர்;த்தியாக வைக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் உள்ள தரமான பொருட்களாக உற்பத்தி செய்துள்ளீர்கள். மகளிர் கூட்டமைப்பில் பல்வேறு பெண்கள் ஒன்றிணைந்து செயல்படுதால் புதிய சிந்தனைகள் பெற்று சிறப்பாக செயல்பட முடிகிறது.
இன்றைய கூட்டத்தின் முக்கிய நோக்கமே தாமிரபரணி ஆறு பாயும் இப்பகுதியில் 53 குளங்கள் உள்ளது. 53 குளங்களுக்கும் தாமிரபரணி அணைக்கட்டு பகுதியில் இருந்து கால்வாய் மூலம் குளங்;களுக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. ஆறு மற்றும் குளங்கள் பகுதியில் அதிக அளவிலான ஆகாய தாமரை செடிகள் வளர்ந்துள்ளது. பல்வேறு திட்டங்கள் மூலம் ஆகாய தாமரை செடிகள் நீர் நிலைகளில் இருந்து எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆகாய தாமரையில் இருந்து கூடைகள், பைகள் மற்றும் சேர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் செய்து விற்று வருகிறார்கள். நமது பகுதியில் அதிக அளவிலான ஆகாய தாமரை செடிகள் உள்ளதால் அவைகளை அரசின் மூலம் எடுத்து காய வைத்து உங்களுக்கு வழங்கப்படும். அதைவைத்து என்னென்ன பொருட்கள் செய்யலாம் என்பது குறித்து உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பண்டைய தமிழகத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கிய கொற்கை கொட்டாரக்குறிச்சியில் இத்திட்டத்தை முதலில் தொடங்கி வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகாய தாமரையின் மூலம் கலை பொருட்கள், பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்து அதிக வருவாய் பெருக்க வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மண்பாண்டம், தேன், ஊறுகாய் மற்றும் பல்வேறு உற்பத்தி பொருட்களை தரப்படுத்தி உற்பத்தி செய்ய வேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு பிரான்ட் நேம் பெற்று தரத்துடன் செய்தால் கூடுதல் விலைக்கு விற்க முடியும். இதை ஒரு ஊராட்சி கூட்டமைப்பால் செய்ய இயலாது. பல்வேறு ஊராட்சி கூட்டமைப்புகள் சேர்ந்துதான் இதுபோன்று செய்திட முடியும். உங்களுக்கு தேவையான உதவிகளை அரசு அவசியம் செய்து தரும் என தெரிவித்தார்.
தொடர்ந்து லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க செயல்வழி கற்றல் பள்ளியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப., மகளிர் திட்ட திட்ட இயக்குநர் திரு.பிச்சை, ஏரல் வட்டாட்சியர் திரு.இசக்கிராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுப்பிரமணியம், திரு.அன்றோ, கொட்டாரக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திரு.துரை, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் திரு.சாமதுரை, திருமதி.பிரியங்கா மற்றும் பல்வேறு ஊராட்சி கூட்டமைப்புகளை சேர்ந்த மகளிர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக