தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது
-------------------------------------------
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தலைமையில் இன்று (17.07.2021) நடைபெற்றது. கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு முதன்மை செயலாளர் திரு.ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., அவர்கள், சமூக நல இயக்குநர் திருமதி.டி.ரத்னா, இ.ஆ.ப., அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநர் திருமதி.வி.அமுதவல்லி, இ.ஆ.ப., அவர்கள் சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் திருமதி.எஸ்.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், சத்துணவு திட்ட பயனாளிகளுக்கு உணவு வழங்குதல், ஊட்டச்சத்து மாவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மீது மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அரசு முதன்மை செயலாளர் திரு.ஷம்பு கல்லோலிகர், இ.ஆ.ப., அவர்களும் துறைரீதியாக ஆய்வு செய்தனர்.
பின்னர் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தகூடிய அனைத்து வகையான திட்டங்களும் ஏழை, எளிய மக்களுக்கு முழு பயன்களும் விரைவில் சென்றடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்கள். சமூக நலத்துறையின் மூலம் பொதுமக்களின் 75 சதவிதம் நபர்கள் நேரடியாக மற்றும் மறைமுகமாக பயன்பெற்று வருகிறார்கள். சத்துணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்தின்கீழ் சுமார் 75 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது சமூக நலத்துறையின் மிகப்பெரிய சேவை ஆகும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள மனுக்களின்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விதிமுறைகளை பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு விரிவாக எடுத்து சொல்ல வேண்டும். திருமண உதவித்தொகையில் பயனடைய பெண் குழந்தைகள் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் உள்ள பெண்கள் 10ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இலவச தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மூலம் சமூக பொறுப்பு நிதியில் மெசின் பெற்று வழங்குவதால் விண்ணப்பித்துள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக நலத்துறையில் விரிவாக்க அலுவலர் பணி மிக முக்கிய பணியாகும். உங்களின் நடவடிக்கையின் மூலம்தான் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் விண்ணப்பித்தவர்களின் மனுக்களை நேரில் சென்று விசாரிக்க வேண்டும். கஷ்டப்பட்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசின் திட்ட உதவிகள் விரைவாக கிடைக்க வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் குழந்தை திருமணங்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்கள். குழந்தை திருமணங்கள் நடத்துவது சட்டப்படி குற்ம் ஆகும். இதுபோன்ற புகார்களை சமூக நலத்துறை அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு குழந்தை திருமணம் நடத்துபவர்கள்மீது காவல் துறையின் மூலம் குற்ற வழக்குகள் பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் கண்டிப்பாக அனுமதி பெற்று நடத்த வேண்டும். பதிவு செய்யாத காப்பகங்கள், இல்லங்களை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அங்கு உள்ளவர்களை அருகில் உள்ள இல்லங்களுக்கு மாற்றிவிட்டு அவர்களை கண்டிப்பாக பதிவு செய்த பின்புதான் நடத்த வேண்டுமென உத்தரவிட வேண்டும். கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இழப்பீட்டு தொகை மட்டும் வழங்க கோப்பு அனுப்படுகிறது. அந்த குழந்தைகள் படிப்பதற்கான செலவுகள் குறித்த அறிக்கைகளையும் உடனுக்குடன் தயார் செய்து அனுப்ப வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் விபத்துகளில் 2 பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண் 181 என்பதையும், குழந்தைகள் பாதுகாப்பிற்கு 1098 என்பதைiயும் அனைத்து பொதுமக்களும், குழந்தைகளும் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். பெரும்பாலான மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சேவை மையம் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கு தங்கி பல்வேறு ஆலோசனைகள் பெற உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவைகள் இலவசம் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் திட்ட முழு பயன்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை முழுமையா நிறைவேற்றும் வகையில் சமூக நலத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில்
மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் 30 பயனாளிகளுக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், 27 பயனாளிகளுக்கு 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகையினையும், தாய் தந்தை இறந்த 41 குழந்தைகளுக்கு தலா ரூ.6000 பராமரிப்பு உதவி தொகையினையும், கொரோனா தொற்றால் 2 பெற்றோர்களையும் இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலையினையும், 5 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக தலா ரூ.2000, மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஃ கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு.சரவணன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கோபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.தனலட்சுமி மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக