" நான் கொரோனா பேசுகிறேன் ''... கவிஞர் ஆ.மாரிமுத்துவின் கொரனோ விழிப்புணர்வு கவிதை


  நான்  கொரோனா  பேசுகிறேன்....



எனது
பிறப்பினை தேடித் தேடி
உனது
இறப்பினை அடையும் 
ஆறறிவு மனிதா
நான்
கொரோனா பேசுகிறேன்
கேள் !

வாழும் உடல்  தேடி
அலையும் உயிர்க் கொல்லி
நான் !

மனித உடலில்
எனை பரப்பும் மாயசக்தி
நான் !

உனை நாடாதிருக்க 
நீ  கூடாதிரு
உனை கொல்லாதிருக்க
கூடி நில்லாதிரு

உயிரைக்  கொல்வது நோக்கமல்ல
உடலெங்கும் பரவி
வாழ்வதே ஏக்கம்  !

எனை ஏற்கும் சக்தியிருந்தால்
அந்த  சக்தி  பெறும்
வழி தெரிந்தால்
நீ
வாழ்வது நிச்சயம் 
நான்
வீழ்வது சத்தியம் .....

புத்தனவன்
போதனைகள் புதைத்து  விட்டாய்
சித்தர்களின்
சிந்தனைகள்  சிதறி விட்டாய்

செத்தவர்கள் கண்டு
பதறும் நீ
இப்பொழுதாவாது
புதைத்ததை தோண்டியெடு
சிதறியதை கூட்டி அள்ளு

பாட்டி சொன்ன வைத்தியம் 
பாட்டியோடு போவதற்கல்ல
என்னோடு
போட்டி  போடுவதற்கே

உன்
உடலில்  வாழப்போவது
நீயா  இல்லை
நானா ?

வீட்டிலிரு
விலகியிரு நீ
விளைத்த தானியம் மட்டுமே 
விழுங்கியிரு

உடலால்  தனித்திரு
உள்ளத்தால் கூடியிரு

ஆதிக்குடி தமிழா
மண்ணை நேசி
உன்
மண்ணில்  விளைந்ததெல்லாம்
ருசி
புசி

உப்பும் மஞ்சளும் போதும்
எனை விரட்ட
சிறு கிராம்பு போதும்
எனைக் கிள்ளி யெறிய

காற்றில் பரவுபவனல்ல
நான் 
கைகளினால் பரவுபவன்
உனது
கண் மூக்கு  வாய்
எனது வாரவேற்பு வளைவுகள் 

புகை உனக்கு  பகை
எனக்கு  உன்னுள் புகும்
கடவுச் சீட்டு 

மது
உற்சாக பானம் 
உனக்கும் எனக்கும்
நீ மாள
நான் வாழ

கழுவு
கண் மூக்கு வாய்
தொடும் கைகளை
கழுவு
அடிக்கடி  கழுவுவதால்
அழுவதை தவிர்க்கலாம் 


கூட்டத்தை  தடுத்து
எனது
நாட்டத்தை நொறுக்கு

எனக்கும் ஆசைதான்
நீ வாழ  -  உன்னுள்
நான் வாழ

என்னுயிர் பெருக பெருக
உன்னுயிர் சிறுக சிறுக
மாண்டு  போகிறாய் மனிதா

தொட்டால் பூ மலர்ந்த
காதல் தேசத்தில் 
தொட்டதால் நான் வளர்ந்தேன்

தொட்டுவிட தொட்டுவிட
தொடர்வேன்
பட்டுவிட பட்டுவிட
படர்வேன் - பாவம்
மனிதர்கள் 

இயற்கையில் நானும் 
உன்னைப்  போல் ஒருவன் 
இயற்கையை நேசி
இயற்யோடு பேசி
இயற்கையே எனை
கொல்லும்படி யோசி
நீ

அழுவதை நிறுத்த
கழுவுவதை நிறுத்தாதே
கவனமாய் நில்லு
கொரோனா
எனைக் கொல்லு!

தூத்துக்குடி  ஆ. மாரிமுத்து.

கருத்துகள்