தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்
----------------------------
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் (03.01.2022) அன்றுதுவக்கி வைத்தார்கள். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கற்றல் இழப்பினை சரிசெய்வதற்காகவும் கற்றல் இடைவெளியை போக்குவதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் கொண்டு வந்துள்ள திட்டம்தான் இல்லம் தேடிக் கல்வித்திட்டமாகும்.
இல்லம் தேடி கல்வித் திட்டமானது பொதுமக்கள் இடத்திலும் பெற்றோர்கள் இடத்திலும் ஆர்வலர்கள் இடத்திலும் மற்றும் பள்ளி மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வயது குழந்தைகளும் பயனடையும் வகையில் இத்திட்டத்தினை உடனடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் முதலியார்குப்பம் குடியிருப்பில் 27.10.2021 அன்று துவங்கி வைக்கப்பட்டது.
இதுவரை நமது மாவட்டத்தில் 7391 தன்னார்வலர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களின் நான்கு முறையான வடிப்பான்கள் மூலம் 2544 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு 1526 தன்னார்வலர்கள் பயிற்சி முடித்துள்ளனர். தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட மையங்களின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் உற்றுநோக்கல் நிகழ்வை முடித்துவிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (03.01.2021) 13 வட்டார வளமையங்களுக்கு உட்பட்ட 1526 இல்லம் தேடிக் கல்வித் திட்ட மையங்கள் துவங்க இருக்கின்றோம்.
இதன் மூலமாக நமது மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட குழந்தைகளின் கல்வி செயல்பாடுகளின் தேக்கத்தையும், கற்றல் இடைவெளியையும் நீக்கிவிடும் என்பது உறுதி. 712 அரசுப்பள்ளிகளில் 44272 மாணவர்களுக்கும் 857 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 84661 மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 1,28,933 மாணவர்கள் பயனடைய இருக்கின்றனர். இன்று ஆரம்பிக்கப்பட இருக்கின்ற மையங்களில் 1526 குடியிருப்புகளில் உள்ள மொத்தம் 30520 மாணவர்களும் பயன் பெறுவார்கள். மேலும் இப்பணி தொடர்ச்சியாக தன்னார்வலர்களை தேர்வு செய்வதும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிப்பதும் போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.பாலதண்டாயுதபாணி, டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.நாகரத்தினம், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.முனியசாமி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் திருமதி.பெர்ஷியாள் ஞானமணி, புள்ளியல் அலுவலர் திரு.சுடலைமணி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தூத்துக்குடி நகர்ப்புறம் மேற்பார்வையாளர்கள் (பொறுப்பு) ஆசிரியர் பயிற்றுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக