மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி. பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர். ஆய்வு .


தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

----------------------------

தூத்துக்குடி மாவட்டம் மேலஆத்தூர் மற்றும் கொட்டாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் ஆகாய தாமரை மதிப்பு கூட்டு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.07.2022) செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,

கிராமப்புறங்களில் ஏழை எளிய மகளிர் மற்றும் சுய உதவிக்குழுவினரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டும், நீர் ஆதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஆகாய தாமரையினை அகற்றிடும் விதமாகவும் கழிவு பொருளான ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியினை ஐதராபாத்தை சேர்ந்த கிரியேட்டிவ் பீ நிறுவனர் திருமதி.பீனா அவர்கள் வாயிலாக ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேலஆத்தூர் ஊராட்சி, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கொட்டாரக்குறிச்சி ஊராட்சி லெட்சுமிபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 


ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மேலஆத்தூர் ஊராட்சி, திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் கொட்டாரக்குறிச்சி ஊராட்சி லெட்சுமிபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள இ-சேவை மையத்தில் மகளிர் திட்டம் சார்பாக சுய உதவிக்குழு மகளிருக்கு ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

இப்பயிற்சியுடன்ன் ஆங்கில பயிற்சியும் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு தேவையான ஆகாய தாமரைகள் ஊராட்சி மன்ற அலுவலகம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. ஆகாய தாமரையின் அடிப்பகுதி மற்றும் இலைகளை அகற்றி  தண்டு பகுதியை  நன்றாக கழுவி 3 நாட்கள் தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு அடுத்த 3 நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். 5 முதல் 6 நாட்கள் வரை நன்றாக காய்ந்த தண்டுகள் வாழை நாரை போன்ற பக்குவத்தில்  தண்டில் இருந்து தேவையான அளவுகளில் நார்  பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் பிரித்தெடுக்கப்பட்ட நாரினை இயந்திரம் மூலம் தயார்படுத்தப்படுகிறது. தயார்படுத்தப்பட்ட நாரின் மூலம் மணிபர்ஸ், பல்வேறு விதமான கூடைகள், பைகள், அழகுபொருட்கள், சமையலறை பொருட்கள் வைப்பதற்கான உபகரணங்கள், டேபிள் மேட், கர்ட்டன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக நடந்து முடிந்த நெய்தல் திருவிழாவில் கண்காட்சி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்கண்காட்சி விரிவடையும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி அமைக்கப்படும். பொருட்களை சந்தைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பயிற்சியில் இளையோர் முதல் 72 வயது முதிய பெண்மணி வரையும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இங்கு பயிற்சி பெறும் பெண்கள் மிக உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் சுய சிந்தனையில் பல பொருட்களை தயாரித்து வருகிறது மிகவும் பாராட்டுக்குரியது. இங்கு பயிற்சி பெறும் பெண்கள் சுயமாக இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்கும் முழு திறத்தோடும், தன்னால் பிறருக்கு பயிற்சி அளிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இப்பயிற்சியானது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விரிவுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் இயக்குநர் மரு.வீரபுத்திரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.புஹாரி, வட்டாட்சியர்கள் திரு.சுவாமிநாதன் (திருச்செந்தூர்), திரு.கண்ணன்(ஏரல்), ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.சதீஷ்குமார் (மேலஆத்தூர்), திரு.துரை(கொட்டாரக்குறிச்சி), கிரியேட்டிவ் பீ நிறுவனர் திருமதி.பீனா, அலுவலர்கள், பயிற்றுனர்கள், பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.



கருத்துகள்