கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்

கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள்  



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் ரூ.177.52 லட்சம் மதிப்பில் 30 திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார்

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகரில் திருநங்கைகளுக்கான சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகள் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.09.2020) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு, 30 திருநங்கைகளுக்கு மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளையும், ரூ.54 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பால்பண்ணையுடன் கூடிய கால்நடை கொட்டகைகளையும், மேலும் பல்வேறு பணிகள் என மொத்தம் ரூ.177.52 லட்சம் மதிப்பிலான திருநங்கைகளுக்கான குடியிருப்பு வசதிகளை திறந்து வைத்தார். இவ்விழாவில் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.


இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சார்ந்த திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் எங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள் என வேண்டுகோள் வைத்தனர். அதனடிப்படையில் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் 30 திருநங்கைகளுக்கு வருவாய் துறையின் மூலம் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு, ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் வீடுகள் வழங்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மற்றும் ஊராட்சி பொது நிதி, கனிம நிதி உள்ளிட்ட நிதிகளை பயன்படுத்தி சாலை வசதிகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பசுமாடுகள் வளர்க்கும் வகையில் மாட்டு கொட்டகையும், திருநங்கைகளின் வீடுகளில் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாடுகள் வாங்குவதற்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் ஒவ்வொரு திருநங்கைக்கும் ரூ.98,000 கடன் உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு தற்போது பாதி தொகை ரூ.49,000 வழங்கப்பட்டு அதில் கறவை மாடுகள் வாங்கப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு ஒரு தொழிலை உருவாக்கிட இத்திட்டங்கள் செய்யப்பட்டது. மேலும் திருநங்கைகள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு தினசரி 220 லிட்டர் முதல் 300 லிட்டர் வரை ஆவின் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்யப்படுகிறது. திருநங்கைகளுக்கென பால் உற்பத்தியாளர் சங்கம் இந்தியாவிலேயே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு தொடர்ந்து பால் மதிப்பு கூட்டும் பொருட்களான பால்கோவா உள்ளிட்டவை செய்யும் வகையில் மதிப்பு கூட்டும் பொருட்கள் தயாரிக்கும் தொழில்களும் துவங்கப்பட உள்ளது. ஏற்கனவே திருநங்கைகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அரசு செய்கின்ற உதவிகளை பயன்படுத்தி திருநங்கைகள் இலாபகரமான தொழிலாக இதை மாற்றி நல்வாழ்க்கை வாழ வேண்டும் என பேசினார்.



இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவது:

தமிழக முதலமைச்சராக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்தபோது திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். மனிதகுலத்தில் யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. கோவில்பட்டி ஒன்றியம் மந்தித்தோப்பு ஊராட்சி சந்தீப்நகர் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சீரிய முயற்சியில் 10 துறைகளுக்கு மேல் ஒருமித்து உருவாக்கிய அழகிய நகரமாக இது உள்ளது. தமிழகத்தின் புதிய எடுத்துக்காட்டாக சந்தீப்நகர் அமைந்துள்ளது. இது இந்தியாவில் முன்மாதிரியான பகுதியாக திகழ்ந்திட வேண்டும். இன்று 30 திருநங்கைகளுக்கு பசுமை வீடுகள் தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.63 லட்சம் மதிப்பிலும் குடிநீர் மற்றும் மின்இணைப்பு பணிகளுக்கு ரூ.16.42 லட்சம் மதிப்பிலும், தார் சாலை வசதிகள் அமைக்க ரூ.22 லட்சம் மதிப்பிலும், மழைநீர் சேகரிப்பு தொட்டி ரூ.1.92 லட்சம் மதிப்பிலும், உறிஞ்சுகுழி ரூ.3லட்சத்திலும், வாறுகால் வசதி ரூ.18 லட்சத்திலும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் 30 கால்நடை கொட்டகை ரூ.54 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.177.52 லட்சம் மதிப்பில் திருநங்கைகளுக்கு குடியிருப்பு வசதி மற்றும் பால்பண்ணையுடன் கூடிய மாட்டு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. நல்ல வளமான பகுதியில் உங்களுக்கு வீடு மற்றும் பால் பண்ணை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக திருநங்கைகளுக்கான  கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது இங்குதான். இந்த சங்கம் முதலாவதாகவும், முன்மாதிரியாகவும் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்பால்பண்ணையை ஈடுபாட்டுடன் செயல்பட்டு  மதிப்பு கூட்டு பொருட்களையும் தயார் செய்து விற்பனை செய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இந்த மனநிறைவான நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்; என பேசினார்.

விழாவில் வருவாய்த்துறை மூலம் பட்டா ஒருவருக்கு வழங்கப்பட்டது. மேலும் 30 திருநங்கைகளுக்கு பசுமைவீடுகளும், மாட்டு கொட்டகையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பிருத்திவிராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, கோவில்பட்டி கோட்டாச்;சியர் திருமதி.விஜயா, கோவில்பட்டி வட்டாட்சியர் திரு.மணிகண்டன்,  கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மாணிக்கவாசகம், திருமதி.வசந்தா, ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.தங்கம்மாள் மாரியப்பன், முக்கிய பிரமுகர்கள் திரு.அய்யாத்துறைபாண்டியன், திரு.ராமச்சந்திரன், திரு.அன்புராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், திருநங்கைகள் கலந்துகொண்டனர்.


கருத்துகள்