தூத்துக்குடி ஒன்றியம் புதுக்கோட்டையில் திருநங்கைகள் சிறப்பு சுய உதவிக்குழுவினர் பாக்குமட்டை தயாரிக்கும் அலகினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார்.
------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஒன்றியம் புதுக்கோட்டையில் மகளிர் திட்டத்தின் மூலம் கனிமம் மற்றும் சுங்கத்துறை நிதியின் மூலம் திருநங்கைகளுக்கான நிலையான வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரூ.4.25 லட்சம் மதிப்பில் சேலன்ஞ் சிறப்பு சுய உதவிக்குழுவினர் பாக்குமட்டைகள் தயார் செய்தல் அலகினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.09.2020) நiடை பெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பாக்குமட்டைகள் தயார் செய்தல் அலகினை திறந்து வைத்து பாக்குமட்டைகள் தயாரிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முநாதன் (ஸ்ரீவைகுண்டம்), திரு.சின்னப்பன்(விளாத்திக்குளம்), தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய முயற்சியாக திருநங்கைகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நோக்கில் மற்ற மாவட்டங்களில் இல்லாத வகையில் நமது மாவட்டத்தில் கனிம வளத்துறையின் மூலமாக திருநங்கைகளுக்கு ரூ.4.25 லட்சம் கடன் உதவியோடு தொழிற்பயிற்சியும் வழங்கி நேரடியாக திருநங்கைகளே மட்டும் கொண்டு செய்கின்ற இந்த தொழில் இன்றைக்கு துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக பிளாஸ்டிக்குக்கு மாற்றாக இயற்கையான முறையிலே தயாரிக்கப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதற்கும் ஒரு வழிகாட்டியாக இந்த பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக 100 சதவிதம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலே பாக்கு மட்டையிலே பிளேட்டுகள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையை இன்று தொடங்கியிருக்கின்றோம்.
தமிழகத்திலே அனைத்து மாவட்டங்களும் பின்பற்றக்கூடிய வகையில் இது ஒரு முன்னுதாரணமாக அமையும். மேலும் திருநங்கைகளுக்கு தனிநகராக உருவாக்கி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மந்தித்தோப்பு பகுதியிலே அவர்களுக்கு தனியாக தொகுப்பு வீடுகளும், அவர்களுக்கு ஒருங்கிணைத்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு இது ஒரு நல்ல முன்னுதாரணமாக உள்ளது என்று மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் அவர்கள் கூறி துவக்க நிகழ்ச்சியில் தானும் நேரடியாக வந்து பங்குபெறுவேன் என்று கூறியுள்ளார். விரைவிலேயே அதுவும் துவக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் திருமதி.ரேவதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் திரு.செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சித்தார்தன், திரு.பொற்செழியன், மாவட்ட கவுன்சிலர்கள் திரு.தேவராஜ், திருமதி.பேச்சியம்மாள், புத்தாக்க திட்ட மாவட்ட திட்ட மேலாளர் திரு.வேல்முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.அழகிரி (எ) கோபி, கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் திரு.ராஜேந்திரன், ஒன்றிய பொறியாளர் திரு.தளவாய், உதவி திட்ட அலுவலர்கள் திருமதி.பிரேமா, திரு.சாமுதுரை, திரு.பிரபாகர், சேலன்ஞ் சிறப்பு சுய உதவிக்குழு தலைவர் பியூட்டி, ஆர்த்தி, முக்கிய பிரமுகர்கள் திரு.சண்முகவேல், திரு.லட்சுமணபெருமாள், திரு.ஜவகர், திரு.ஜாட்சன்துரைமணி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக