தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம்

 





தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என். கே மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் (Village Vigilance Committee meeting)   நடைபெற்றது. 


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள என்.கே மஹாலில் இன்று (02.10.2020) கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கலைக்கதிரவன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  


இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்கள் உட்கார்ந்து, அவரவர் பகுதிகளில் உள்ளவர்கள் குழுவாக அமர்ந்து கலந்தாய்வு செய்ய வேண்டும். இதற்கு தலைவர், செயலாளர் போன்றெல்லாம் எதுவும் தேவையில்லை. இதில் அனைத்து தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டு, உங்கள் பகுதிகளில் குறைகள் என்னவென்பதை அறிந்து, பொதுவான நலன் சார்ந்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டு, உங்கள் பகுதி முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்துவதற்கான கூட்டம் தான் இந்த கிராம விழிப்புணர்வு குழு கூட்டம். 


உதராணமாக உங்கள் பகுதியில் ஒரு பெரிய பிரச்சனை நடக்கப்போகிறது என்றோ அல்லது சட்டவிரோதமான செயல்கள் நடந்து கொண்டிருந்தாலோ அது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும்போது, அதன் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அந்தப்பிரச்சனை வரவிடாமல் தடுக்க முடியும். இந்த கிராம விழிப்புணர்வு கூட்டங்களில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பெண்களுக்கெதிரான குற்றங்கள், சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அவற்றிற்கான சட்டம் மற்றும் தண்டனை குறித்தும், அதோடு மட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எங்கெங்கு உள்ளது என்பது குறித்தும், இது போன்ற பல நல்ல விஷயங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகளால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், 


உங்கள் பகுதிக்கு பேரூந்து வரவில்லை, ரோடு சரியில்லை போன்ற பிரச்சனைகள் இருந்தால் கூட அவற்றை இந்த கிராம விழிப்புணர்வு குழு கூட்டத்தில் தெரியப்படுத்தினால், அதை காவல்துறை செய்ய முடியாவிட்டாலும் கூட, சம்மந்தப்பட்ட துறையினருக்கு அதை தெரியப்படுத்தி அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 


தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கிராம விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தின் முடிவில், அதில் என்னென்ன கருத்துக்கள் பரிமாறப்பட்டது, என்னென்ன குறைகள் உள்ளது போன்ற அனைத்து விஷயங்களுக்கும் தீர்மானமான நிறைவேற்றப்படும் என்றும்,  இந்தக்குழுவில் அந்தந்த பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதும், சட்ட விரோத செயல்களை தடுப்பதும்,  போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் உள்ள நல்லுறவை வளர்ப்பதும் இந்த கிராம விழிப்புணர்வு குழு கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். 


மேலும் கொரோன வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் ஒரிரு ஆண்டுகள் கூட இருக்கலாம். அதுவரை பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு கழுவுதல் போன்றவற்றை மேற்கொண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இவற்றை கடைபிடிப்பதன் மூலம் சாலை விபத்துக்களில் ஏற்படும்  விபத்துக்களிலிருந்து  உயிரிழப்பை தவிர்க்க முடியும் என்றும், 


சிசிடிவி கேமரா என்பது தற்போது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த சிசிடிவி கேமரா மூலம் 90 சதவீத குற்றங்களை மிக எளிதாக  கண்டுபிடிக்க முடிகிறது.  சிசிடிவி கேமரா பொருத்துவதன் மூலம் நடந்த குற்றத்தை கண்டு பிடிக்கவும், குற்றம் நடக்காமல் தடுக்கவும் முடியும் என்று சிசிடிவியின் முக்கியத்துவம் பற்றியும் மாவடட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசினார்.


இக்கூட்டத்தில்  பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்