தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக கே. செந்தில்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக மீன்வளத் துறை மேலாண்மை இயக்குநராக இருந்த எஸ். சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி மாற்றப்பட்டுத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கே. செந்தில் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பொறுப்பு) இயக்குநராக இருந்த விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக இருந்த மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே. ஜெயகாந்தன், மீன் வளர்ச்சி கழக இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எஸ். கந்தசாமி, இ-சேவை, குறைதீர் அமைப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக ஜெஸிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக எஸ். திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக