தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகியோருக்கான பயிற்சி கூட்டம்
-----------------
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் ஆகியோருக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.02.2021) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 என 18 பறக்கும் படைகளும், தலா 3 என 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும், தலா 2 12 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுவில் உள்ள நீங்கள் பல்வேறு பதவிகளை வகித்தாலும் தற்போது நீங்கள் தேர்தல் ஆணையத்தின் அலுவலர்களாக உள்ளீர்கள். உங்களது பணி தேர்தல் காலங்களில் மிக அவசியமான பணியாகும். எனவே பணியின்போது மிகுந்த கவனத்துடன் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி செய்திட வேண்டும். உங்களது தொலைபேசி எண்கள் அனைத்தும் மாவட்ட அளவில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் உங்களுக்கு கொடுக்கப்படும் தகவல்களை கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். உங்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையினை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கொரோனா காலமாக இருப்பதால் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். பொதுமக்களுடன் இணைந்து பணி மேற்கொள்ள உள்ள காரணத்தால் அன்பாகவும், கவனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். வங்கியின் மூலம் பணம் எடுத்து செல்லும் வாகனங்கள் சரியான சான்றிதழ் கடிதங்களுடன் செல்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் பறக்கும் படைகள் 8 மணி நேரத்திற்கு சுழற்சி அடிப்படையில் பணியாற்றிட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்களுக்கு நேரில் விசாரணை மேற்கொண்டு உண்மை தன்மையினை ஆய்வு செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், மது, இதர பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற புகார் பெறப்பட்டால் அதுகுறித்தும் அப்பகுதிக்கு சென்று உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாகன சோதனையின்போது பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து சென்றால் அவைகளை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் கட்சிக்கொடி, சுவரொட்டிகள், விளம்பரங்கள் ஏதும் இருப்பின் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பறக்கும் படையினர் தங்களது தினசரி பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
நிலையான கண்காணிப்பு குழுக்கள் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோதனை சாவடிகள் மற்றும் முக்கியமான இடங்கள், சாலைகளில் வாகன சோதனைகளில் ஈடுபட வேண்டும். வாகனங்களில் உரிய ஆவணம் இன்றி தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி பணம் மற்றும் பரிசு பொருட்களை எடுத்து சென்றால் விசாரணை செய்து கைப்பற்றி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்தும் வரப்பெறும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
வீடியோ கண்காணிப்பு குழுவினர் கட்சி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், பிரசார பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் செலவினங்கள் குறித்த ஆதாரங்கள், கூட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் செலவினங்கள் குறித்த ஆதாரங்களையும் கண்காணித்து முழுமையாக வீடியோ கவரேஜ் செய்ய வேண்டும். பொதுக்கூட்டங்களில் கட்சி பிரமுகர்களின் உரைகளையும் வீடியோ கவரேஜ் செய்ய வேண்டும். கட்சியினர் மேற்கொள்ளும் செலவினங்களையும் முழுமையாக கண்டறியும் வகையில் அனைத்து விதமான பதிவுகளையும் கண்காணித்து செய்ய வேண்டும். இந்த வீடியோக்களை வீடியோ கண்காணிப்பு குழுவினரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து குழுவினர்களும் தங்களது பணிகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி கவனமாக மேற்கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். கட்டுப்பாட்டு அறை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருடன் உடனுக்குடன் தகவல்களை பரிமாறி சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடைபெற முழுமையாக கண்காணித்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.சங்கரநாராயணன் (கோவில்பட்டி), செல்வி.தனப்ரியா(திருச்செந்தூர், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அபுல்காசிம் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக