தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம்
.
-----------
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடிகளில் பணியாற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.03.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமூக நோய் தடுப்புத்துறை தலைவர் மரு.சுனிதா அவர்கள் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் இதுவரை 6,70,000 நபர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முன்கள பணியாளர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் இணைநோய் உள்ளவர்களுக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகிறது. 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகள் அனைத்தும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நமது மாவட்டத்தில் 1603 வாக்குசாவடிகள் இருந்தது. தற்போது 2903ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகமூடி அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வாக்குசாவடிக்கு வரும் வகையில் தன்னார்வலர்களை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பான முறையில் வரிசையில் வருமாறு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டு போடுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யும்போது பாலிதின் கையுறைகள் அணிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1903 வாக்குசாவடிகளில் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த 12000க்கும் மேற்பட்ட வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளார்கள். மேலும் 3000க்கும் மேற்பட்ட காவல் துறையினர், 3000க்கும் மேற்பட்ட வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பல்வேறு துறை அலுவலர்களும் என கிட்டத்தட்ட 19000க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளார்கள். இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வாக்குசாவடியில் பணியாற்றும்போது சாணிடைசர் பயன்படுத்த வேண்டும். அவசியம் முகமூடி அணிய வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் நலனை காக்கவும், பொதுமக்களின் நலனை காக்கவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ரேவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஞானகௌரி, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பாவலன், துணை கண்காணிப்பாளர் மரு.குமரன், கோவேக்சின் தடுப்பூசி ஒருங்கிணைப்பாளர் மரு.மாலையம்மாள் மற்றும் ஆசிரியர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக