தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி பேயன்விளை, பரமன்குறிச்சி, நாசரேத் பேரூராட்சி, குரங்கணி ஆகிய பகுதிகளில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
------------------------------
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி பேயன்விளை, பரமன்குறிச்சி, நாசரேத் பேரூராட்சி, குரங்கணி ஆகிய பகுதிகளில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் (31.05.2021) அன்று நடைபெற்றது. இம்முகாமில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஷ்சிங், இ.கா.ப., மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரோனா தொற்று நோயை தமிழகத்தில் முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தினமும் சுமார் 9500 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனை 10000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அதிகப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் தற்போது 26 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் கொரோனா நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக தடுப்பூசியை போட்டுக்கொள்கின்றனர். தடுப்பூசி நம்முடைய உயிரை காக்கக்கூடியது.
பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பரவலை தடுத்திட வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும் எவ்வித அச்சமும் இன்றி கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அரசின் ஊரடங்கு விதியை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும். சுகாதார பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், காயாமொழி குளத்தினை பார்வையிட்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளத்தினை தூர்வாறி ஆழப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் திரு.உமரிசங்கர், திரு.ராமஜெயம், திரு.எஸ்.ஜெ.ஜெகன், திரு.எ.பி.ரமேஷ், திரு.கல்யாணசுந்தரம், திரு.அருணாசலம், திரு.பாலசிங், திரு.நவீன்குமார், திரு.செல்வகுமார், திரு.ராஜசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.லட்சுமணன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, வட்டாட்சியர்கள் திரு.முருகேசன் (திருச்செந்தூர்), திரு.இசக்கிராஜ் (ஏரல்), வட்டார மருத்துவ அலுவலர் திரு.பார்திபன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள்; கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக