தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள்

 



தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்களை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்.

-------------------------

தூத்துக்குடி மாவட்டம் சிங்கிதுறை, அமலிநகர், ஆலந்தலை  மீனவர் கிராம பகுதியில் மீன்வளம் - மீனவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய நாட்டு படகுகளுக்கு மானிய விலையில் வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.06.2021) நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிங்கிதுறையில் 5 மீனவர்களுக்கும், கொம்புதுறையில் 5 மீனவர்களுக்கும், அமலிநகர் மீனவர்கள் 8 நபர்களுக்கும், ஆலந்தலை மீனவர்கள் 7 நபர்கள் என மொத்தம் 25 நபர்களுக்கு மானிய விலையிலான வெளிப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார்.

பின்னர் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசியதாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திட வேண்டும். அவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும். மீனவ கிராமங்களுக்கும், மீனவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்திட வேண்டும். இதற்கான திட்டங்களை தீட்டுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்கள். அதனடிப்படையில் சென்னையில் உள்ளதை போல தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் சில்லறை மீன் விற்பனை நிலையங்கள் நவீன முறையில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு படகுகளையும் பாதுகாப்பான முறையில் நிறுத்த சென்னையில் உள்ளதைப்போல இங்குள்ள பல்வேறு பகுதியில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் கடலுக்கு சென்று காணாமல் போனால் 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் அவரது குடும்பத்திற்கு ஏதாவது அரசு இழப்பீடுகள் கிடைக்கும். இதை மாற்றி உள்ளுர் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கேரண்டியுடன் 3 மாத காலத்திலேயே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் மீனவர்களின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட உள்ளார்கள்.

மீனவர்கள் தங்கள் பிடித்து வரும் மீன்களை வியாபாரிகள் தங்களுக்குள் பேசி வைத்து குறைந்த விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதை மாற்றும் வகையில் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு சரியான விலை கிடைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. மீன்களை அந்தந்த பகுதியில் பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு பசுமை திட்டம் இருப்பதை போல மீனவர்களுக்கு நீலத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இன்று மீனவர்களுக்கு முழு விலை ரூ.134784 இதில் பயனாளிகள் கட்ட வேண்டிய தொகை ரூ.86784, அரசு மானியம் 40 சதவிதம் ரூ.48000 மானியத்தில் வெளிப்பொறுத்தும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை மானிய விலையில் மீனவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பெற முடியும். இதையும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மானிய விலையில் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் அமலிநகர் மீனவர் கிராம பகுதியில்  ரூ.43 கோடி மதிப்பிலும், சிங்கிதுறை மற்றும் கொம்புதுறை மீனவர் கிராமங்களில் ரூ.28 கோடி மதிப்பிலும், இனிக்கோநகர் மீனவர் கிராம பகுதியில் ரூ.3.50 கோடி மதிப்பிலும், விவேகானந்தர் மீனவர் காலணி பகுதியில் ரூ.2.70 கோடி மதிப்பிலும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளுக்கு திட்ட மதிப்பிடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்பிட்டில் ஒருங்கிணைந்த மீன்வளம் அலுவலகம் கட்டும் பணிக்கும், மணப்பாடு மீனவர் கிராமத்தில் ரூ.3.11 கோடி மதிப்பிட்டில் புதிதாக மீன் ஏலக்கூடம் மற்றும் வலைப்பின்னும் கூடம் கட்டும் பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பிடு செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகளுக்கு ஒப்புதல் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு விரைவில் மேற்கொள்ளப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீனவர்கள் பயன்படுத்தும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் அளவினை அதிகரித்து தரப்படும் என அளித்த வாக்குறுதி விரைவில் நிறைவேற்றப்படும். மீனவர்களுக்கு நவீன முறையிலான திட்டடங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு அவர்கள் சிறப்பாக வாழ வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.




தொடர்ந்து திருச்செந்தூர் கோட்டம் காயாமொழி குமாரசாமிபுரம் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் ரூ.4.6 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 25 கேவிஎ திறனுடைய புதிய மின்மாற்றியை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்தார்.


மேலும் ஆலந்தலை பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பில் மூலம் ரூ.52 கோடி மதிப்பிட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஹர்ஸ்சிங், இ.கா.ப., திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, மீன்வளத்துறை இணை இயக்குநர் திரு.அமல்சேவியர், உதவி இயக்குநர்கள் திரு.விஜயராகவன், திருமதி.வயலா, காயல்பட்டிணம் ஆணையர் திருமதி.சுகந்தி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் திரு.கங்காதரன், மின்சார வாரிய செயற்பொறியாளர் திரு.பாக்கியராஜ், முக்கிய பிரமுகர்கள் திரு.உமரிசங்கர், திரு.ஜெகன், திரு.ராமஜெயம், திரு.செங்குளி எ.பி.ரமேஸ், திரு.வால்சுடலை, திரு.எஸ்.ஐ.காதர், திரு.முத்துமுகம்மது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திரு.ரகுபதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




கருத்துகள்