மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., தலைமையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அன்று (25.06.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனை மட்டுமின்றி காப்பீட்டு திட்டத்தில் இணைக்கபட்டுள்ள தனியார் மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்கள். எளிய மக்களுக்கு உதவிடும் திட்டமான காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி மற்ற நோயாளிகளுக்கு அதிக அளவில் சிகிச்சை அளிக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்திற்கு ஒவ்வொரு மருத்துவமனை 2 அலுவலர்களை நியமிக்க வேண்டும். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் காப்பீட்டு திட்ட அட்டை உள்ளதா எனவும், காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற விருப்பம் உள்ளதா என அவசியம் கேட்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற விருப்பம் உள்ளவர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை இல்லை எனில் நோயாளியை சிகிச்சைக்கு சேர்த்துக்கொண்டு அவரது உறவினர்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் காப்பீட்டு அட்டை எண் பெற தேவையான ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தில் டயாசிஸ் செய்யப்படுகிறது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு நோயாளிகள் அதிக தூரத்திற்கு சென்று சிரமப்படக்கூடாது என்பதற்காக அதிகமான எண்ணிக்கையிலான மருத்துவமனைகளை காப்பீட்டு திட்டத்தில் இணைத்துள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிப்பதை காட்டிலும் அதிக அளவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துமனைகளுக்கான தொகை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தினை அதிக அளவில் அனைத்து மருத்துவமனைகளும் செயல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகள் குறைந்துள்ளதால் மற்ற நோயாளிகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்;தில் அதிக அளவில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் காப்பீட்டு திட்ட நோயாளிகளுக்கு அதிக சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நேரு மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக