காவல் துறை சார்பாக தெர்மல்நகர் கேம்ப் ஐ பகுதியைச் சார்ந்த தூய்மைப்பணியாளர்கள் - மீனவர்களுக்கு நிவாரண பொருள்கள்

 


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தெர்மல்நகர் கேம்ப் -ஐ மற்றும் புதிய துறைமுகம் அருகிலுள்ள குண்டுபாடு ஆகிய பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு ஊரடங்கு காலத்தை முன்னிட்டு அரிசிப்பை, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.

 தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு தெர்மல்நகர் கேம்ப் ஐ பகுதியைச் சேர்ந்த சிரமப்படும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் 50 பேருக்கும், புதிய துறைமுகம் அருகிலுள்ள குண்டுபாடு பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கஷ்டப்பட்டு வரும் மீனவர்கள் 25 பேருக்கும் அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.



அப்போது அவர் பேசுகையில், கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது, அதற்காக தமிழக அரசு வரும் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. 7ம் தேதி வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும், அத்தியவாசியப பொருட்கள் காய்கறிகள், பழங்கள் கூட அரசாங்கத்தால் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நாள் தோறும் வேலை செய்து கொண்டிருக்கும் மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் கிடைப்பதற்கு சிரமம் இருக்கலாம். ஆகவே தூத்துக்குடி  மாவட்ட காவல்துறை சார்பாக இந்த நிவாரணப் பொருட்கள் உங்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும், அதே போன்று மூக்கை நன்றாக மூடி முகக் கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது, ஏனென்றால் 90 சதவீதம் முக்கு வழியாகத்தான் இந்த வைரஸ் பரவுகிறது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை தவறாமல் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தெர்மல்நகர் காவல் ஆய்வாளர் திருமதி. சாந்தி, தெர்மல்நகர் தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. சிக்டஸ் ஜெனிவர் ஆகியோர் செய்திருந்தனர். 


கருத்துகள்