தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் 123 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2000 மற்றும் 10 நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் வழங்கினார்.
------------------------
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த கொரோனா நிவாரணத்தொகை ரூ.2000 வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று (18.06.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு, 123 நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2000 மற்றும் 10 நலிவடைந்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா நிவாரண உதவித்தொகையாக தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.4000 இரண்டு தவணைகளாக வழங்க உத்தரவிட்டார்கள். இதில் குடும்ப அட்டை உள்ள திருநங்கைகள் அனைவரும் பயன்பெற்றார்கள். குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் தங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள 8500 திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண உதவித்தொகை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 123 நபர்களுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் திருநங்கைகளுக்கு என நலவாரியம் அமைத்தார்கள். மேலும் அவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கினார்கள். அவரது வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருநங்கைகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் இணையதளம் மூலமாகவும் அடையாள அட்டைகளை பெறலாம். மேலும் குடும்ப அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படும். உங்களது தகுதியின் அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. நீங்கள் அரசின் உதவிகளை பெற்று அவைகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.தனலட்சுமி மற்றும் அலுவலர்கள், திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக