கொரோனா கட்டுப்பாட்டு அறை (WAR ROOM ) அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ்

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை (WAR ROOM )    அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்

--------------------------




தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 24  x  7 (WAR ROOM )  பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (24.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு அலுவலர்கள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.




நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை   (WAR ROOM)  பல்வேறு துறை அலுவலர்கள் ஒன்றாக ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றினீர்கள். அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். கொரோனா ஊரடங்கு நேரத்திலும் பணிக்கு வருவது ஒரு கடினமான விசயமாக இருந்திருக்கும். ஒருசில குடும்பங்களில் எதிர்ப்புகளையும் மீறி அர்ப்பணிப்பு உணர்வுடன் இப்பணியை செய்து இருப்பீர்கள். உங்களது சுய முயற்சியாக இங்கு வந்து இப்பணியை சிறப்பாக ஆற்றி உள்ளீர்கள். கட்டுப்பாட்டு அறை துவக்கும்போது ஒரு சில சிரமங்கள் இருந்தது. அவைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்கள் தலைமையிடத்திலும் பாராட்டும் வகையில் இரவு பகல் பாராமல் பணியாற்றி உள்ளீர்கள். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை, பேரூராட்சிகள் துறை, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் புள்ளிவிவரங்களை சரியாக கொடுத்ததால்தான் இங்கு அனைவரும் சிறப்பாக பணியாற்ற முடிந்தது. இதற்காக அனைவரையும் நான் பாராட்டுகிறேன். வைரஸ் உருமாற்றம் அடைந்து மூன்றாவது அலை வந்தாலும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்து நாம் எப்போதும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். கொரோனா பணியில் ஒருங்கிணைந்து பணியாற்றிய அனைத்து துறை அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.


நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) திருநெல்வேலி திரு.சரவணன், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய்நாராயணன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.அமுதா, ஆட்சியர் அலுவலக மேலாளர் திரு.இளங்கோ, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் திரு.செல்வபிரசாத் மற்றும் மருத்துவர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி. 

கருத்துகள்