சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா




தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 -----------------------

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சிறப்பு தொழில் கடன் மேளா தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.12.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இளம் தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: 


 தொழில் முனைவோர்கள் மீது நம்பிக்கை வைத்து கடன் வழங்கியுள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றி கடனை நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள் என நம்புகிறேன். குறுகிய காலத்தில் அதிகஅளவிலான பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கியுள்ளார்கள். தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு தொழில் முனைவோர்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள். தூத்துக்குடி நகரம் சிறிய நகராட்சியாக இருந்து இன்று பெரிய மாநகராட்சியாக உயர்ந்திருப்பதற்கு காரணம் தொழில்முனைவோர்கள்தான். தூத்துக்குடிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில் புரிவதற்கு தொழில் முனைவோர்கள் வருவதற்கு தூத்துக்குடியில் அனைத்து வசதிகளும் இருப்பதுதான் காரணம். மண்ணின் மைந்தர்களாகிய உங்களது ரத்தத்திலேயே தொழில் புரிவதற்கான உணர்வு இருக்கிறது. 

ஆங்கிலேயர் காலத்திலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ.உ.சி. அவர்கள் 2 கப்பல்களை வாங்கி சுதேசி இயக்கத்தை உருவாக்கினார்கள். தூத்துக்குடி மாவட்டம் சுதந்திர உணர்வு அதிகம் உள்ள மாவட்டம் மட்டுமல்லாமல் தொழில் புரிவதற்கானஉணர்வும் அதிகமுள்ள மாவட்டமாகும். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கு அரசு முனைப்புடன் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சிப்காட் மட்டுமல்லாமல் அதற்கு அருகே சுமார் 1500 ஏக்கர் பரப்பில் தளவாடபூங்கா அமைப்பதற்கு நிலம் கையப்படுத்தும் பணிகள் நிறைவுபெற்று தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தளவாட பூங்கா தொடங்கப்பட்டு இங்கு உற்பத்தி செய்யப்படும் தளவாடங்கள் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். மேலும் சுமார் 100 ஏக்கர் பரப்பில் காற்றாலை நிறுவனம் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி மையம் ஆகியவை நிறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


சிறு, குறு தொழில்கள் இல்லாமல் பெரிய தொழில்கள் வளரமுடியாது. நமதுநாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவீதம் சிறு, குறு தொழில்களின் பங்களிப்பு உள்ளது. இந்தியாவிலேயே சிறு, குறு தொழில் துறையில் உத்திரபிரதேசம், மேற்கு வங்க மாநிலத்திற்கு அடுத்து 3வது பெரியமாநிலமாகதமிழகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறு, குறு தொழில் துறையின் உற்பத்திபிரிவில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தொழில் முனைவோர்கள் அதிக அளவில் முதலீடு செய்து நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும். உங்களுக்குதேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி நீங்கள் புதியதொழில்களை தொடங்கி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.


 நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமதி.ஸ்வர்ணலதா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அலுவலர் திரு.மோத்தா, கிளை மேலாளர் கண்ணன், திட்ட அலுவலர் திரு.விஷ்வவாணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். .

கருத்துகள்