மாணவர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறை
--------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 56 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான நான் முதல்வன்-கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.05.2023) மாணவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டி தெரிவித்ததாவது:
பள்ளிக் கல்விக்கு பிறகு மாணவர்கள் அனைவரும் அர்த்தமுள்ள உயர் கல்வி படிப்புகளை தொடரச் செய்வதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாட்டின் உயர்கல்வி விகிதத்தை 51 சதவீதத்தில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 சதவீதமாக உயர்த்தவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறேன். நீங்கள் இத்துடன் நின்றுவிடக்கூடாது. 12ஆம் வகுப்பு முடித்தவுடன் அடுத்த என்ன படிக்கலாம் என்று அனைவருக்கும் குழப்பம் இருக்கும். 2040ல் உருவாகும் வேலைவாய்ப்புகளில் 90 சதவீதம் வேலைகள் இன்று இல்லை. இன்றைக்கு படிக்கும் புத்தகங்கள் வேலைவாய்ப்புக்கு உதவாது. மேலும் பல்வேறு புதுப்புது படிப்புகளை படிக்க வேண்டும். எந்த படிப்பு படித்தாலும் அதில் ஆர்வத்துடன் படிக்க வேண்டும். கல்லூரி மாணவர்கள் புத்தகங்கள் மட்டுமல்லாது நாளிதழ்களையும் தினமும் படிக்க வேண்டும். நீங்கள் பெரிய இலட்சியங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
அரசு பள்ளிகளில் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டி குழு மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்த நிலையில் அவர்களுடைய மனதில் உயர்கல்வி தொடர்பான ஆலோசனை வழங்குகிறது. மாணவர்கள் அந்த குழுவை தொடர்பு கொண்டு என்ன படிக்கலாம், எப்படி படிக்கலாம், கல்வி உதவி தொகை விவரம், இட ஒதுக்கீடு முறை, கல்லூரி விண்ணப்ப படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது மற்றும் சமூக, குடும்ப சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை பற்றி மாணவர்கள் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்
.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு.அப்துல்கலாம் அவர்களை சிறுவயதில் அவரது ஆசிரியர் திரு.சிவசுப்பிரமணிய ஐயர் கடற்கரைக்கு அழைத்து சென்றார். அப்போது திரு.அப்துல்கலாம் அவர்கள் பறவைகளை பார்த்துவிட்டு ஆசிரியடம் நாமும் அவ்வாறு பறக்க முடியுமா என்று கேட்டார். அதற்கு ஆசிரியர், நாமும் விமானியானால் விமானத்தில் பறக்க முடியும் என்று கூறினார். எனவே விமான ஓட்டியாக மாற வேண்டும் என்று நினைத்தார். ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் விமானியாக முயன்றபோது கிடைக்கவில்லை. இருப்பினும் விஞ்ஞானியாகி பொக்ரான் அணு ஆயுத சோதனை மற்றும் பல செயற்கைகோள்களை உருவாக்கினார். பின்னர் இந்திய குடியரசு தலைவரானபோது மிக் ரக விமானத்தில் பறந்து தனது 70 வயதில் இலட்சியத்தினை அடைந்தார்.
நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கி பயணம் செய்ய வேண்டு;ம். பிறக்கும் போது அனைவரும் அறிவாளிகளாக பிறக்கவில்லை. தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற நீங்கள் எந்த கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அதில் சேர்ந்து சிறப்பாக படிக்க வேண்டும். இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள சீனாவை முந்தி முதல் இடத்திற்கு வந்துள்ளது. இந்திய மக்கள் தொகையின் சராசரி வயது 26. இதுவோ 2040ல் இந்தியா 30, சீனா 40, அமெரிக்கா 43, ஐரோப்பா 52 சராசரி வயதாக இருக்கும். நீங்கள் கல்லூரி படிப்பு முடித்து அரசியல்வாதியாகவோ, தொழில்முனைவோராகவோ, வெளிநாட்டிலோ வேலை செய்யலாம். பட்டப்படிப்புடன் சேர்த்து ஸ்போக்கன் இங்கிலீஷ் உள்ளிட்ட இதர திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆங்காங்கே கிடைக்கும் சிறு, சிறு ஆலோசனைகள் வாழ்க்கையில் படிக்கட்டுகளாக இருக்கும். எனக்கு ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ், ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஐ.ஏ.எஸ். ஆவதற்கு ஒரு டிகிரி இருந்தால் போதும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். நிறைய பேர் அரசு பள்ளியில் படித்து முன்னேறியிருக்கிறார்கள். உங்களது எண்ணங்களுக்கு எது உகந்ததோ அதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.
நமது முன்னேற்றத்துக்கு தடை பொருளாதார காரணிகளோ, பெற்றோரோ, உறவினர்களோ கிடையாது. இராமநாதபுரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த திரு.அப்துல்கலாம் அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய விஞ்ஞானியானார். இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆனார். ஒவ்வொருவராலும் முன்னேற முடியும். உங்களுக்கு தேவை தன்னம்பிக்கை. யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., இரயில்வே உள்ளிட்ட நிறைய போட்டித் தேர்வுகள் உள்ளன. அளவில்லாத படிப்பும், சேவையும்தான் உங்களை வாழ்;க்கையில் முன்னேற்றும். மேலும், வாழ்க்கையில் மற்றவர்களை புண்படுத்தக்கூடாது. ஒவ்வொருவரும் நான் முதல்வனாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் வெற்றியாளர்களாக வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப., அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கு.சிவகுமார்;, வேளாண்மை கல்லூரி முதல்வர் திரு.தேரடிமணி, முதல்வர் பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரி முதல்வர் திரு.பீட்டர் தேவதாஸ் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக