நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் : அமைச்சர் திரு.கே.என்.நேரு தகவல்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி

 நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை  விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்

------------------------------------------------------------------------------

 


 தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.56.65 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் மற்றும் 15வது நிதிக்குழுத் திட்டங்களின்கீழ் முடிவுற்ற பணிகளை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (26.05.2023) திறந்து வைத்தார். ரூ.10.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.7.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டோபிகானா, ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சிக்குட்பட்ட 8 பகுதிகளில் பூங்கா, ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளமீட்பு மையம், சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா, ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பழமை வாய்ந்த தெற்கு புதுத்தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ரூ.11.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையம், ரூ.9 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கான சீர்மிகு பணிமனை ஆகியவற்றை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திறந்து வைத்து தெரிவித்ததாவது: 

தூத்துக்குடி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், புதிதாக தொடங்கப்படவுள்ள முக்கியமான திட்டப்பணிகள் குறித்தும், மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.  

 


தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் ரூ.899.95 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில திட்டங்கள் நடந்து முடியும் நிலையில் இருக்கிறது. மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள், திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், காயல்பட்டிணம் நகராட்சியில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார். மேலும், மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், புதிதாக போடப்படும் சாலைகள் மண் சாலையின்றி முழுமையாக தார் சாலையாக அமைக்க வேண்டும், ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர்கள், ஓட்டப்பிடாரம், விளாத்திக்குளம், புதூர் பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்கள். அனைவரின் கோரிக்கையும் நிறைவேற்றப்படும். 

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்லடுக்கு கார், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் முடிக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், திட்டப்பணிகளுக்கு தேவையான நிதியினையும் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். எனவே திட்டப்பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தெரிவித்தார். 

மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தெரிவித்ததாவது: 

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை, குடிநீர் வசதிகள் செய்து தருவதற்கான உறுதியினை அமைச்சர் அவர்கள் அளித்திருக்கிறார்.  மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நமது மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரிடம், 20 நாட்களில் முடிக்க வேண்டிய பணிகளை 2 நாளில் முடித்து தந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் எந்த ஒரு வேலையையும் ஒப்படைப்பார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை விரைந்து முடித்து தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம் என மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2 ஆண்டுகளில் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.  மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் முயற்சியால் மாநகராட்சியில் சாலைகள், கட்டிடங்கள், மழைநீர் வடிகால்கள், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி என மொத்தம் ரூ.546 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள் என மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில்  ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், புதிதாக தொடங்கப்படவுள்ள முக்கியமான திட்டப்பணிகள் குறித்தும், மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ஷிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குநர் திரு.வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., பேரூராட்சிகள் இயக்குநர் திரு.கிரன் குராலா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள்  திரு.எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), திரு.ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், இ.ஆ.ப., துணை மேயர் திருமதி.செ.ஜெனிட்டா,  மாநகராட்சி மண்டல தலைவர்கள் தொ.நிர்மல்ராஜ் (வடக்கு), திருமதி.கோ.அன்னலெட்சுமி(மேற்கு), மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.செ.ஜாக்குலின் திரு.ர.அதிஷ்டமணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். 



கருத்துகள்